Saturday 1 October 2011

திசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை?


நியூயார்க், செப். 24: பிரதமர் மன்மோகன் சிங்கின் ஐ.நா. சபை உரை பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகப் பல பிரச்னைகளிலும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் கருத்துகளை ஆதரித்து வந்த இந்திய அரசு, இப்போது புதிய அணுகுமுறையைக் கையாளத் தலைப்பட்டிருக்கிறதோ என்கிற சந்தேகத்தைப் பிரதமரின் ஐ.நா. சபை உரை ஏற்படுத்தியிருக்கிறது.
 ÷இதற்கு முன்னால், ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகளில் ஐ.நா. சபையின் ஒத்துழைப்பில்லாமல் நேரடியாக அமெரிக்காவும், பிரிட்டனும் நடத்திய அத்துமீறல்களின்போது, வன்மையான எதிர்ப்பையோ கண்டனத்தையோ தெரிவிக்காத இந்தியா, இப்போது மறைமுகமாக அமெரிக்க நடவடிக்கைகளுக்கு எதிரான அணுகுமுறையை கையாள நினைக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.
 ÷அவர்களுடைய விமர்சனத்துக்குக் காரணம் மூன்று முக்கியமான பிரச்னைகளில் அமெரிக்காவின் கருத்துகளிலிருந்து இந்தியா மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதைப் பிரதமரின் ஐ.நா. சபை பேச்சு வெளிப்படுத்தி இருப்பதுதான். உலகத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவுக்குக் காரணமே அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளில் நிலவும் பொருளாதாரப் பிரச்னைகள்தான் என்பதைப் பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையில் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள் விமர்சகர்கள்.
 ÷""உலகமயமாக்கலும், சந்தைப் பொருளாதாரமும் உலக மக்களின் மேம்பாட்டுக்கு வழிகோலும் என்று கடந்த சில வருடங்களுக்கு முன்னால் நம்பிய உலகம், இப்போது அதன் எதிர்வினை விளைவுகளை எதிர்நோக்கத் தொடங்கி இருக்கிறது. உலகப் பொருளாதாரமே இப்போது தகரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது'' என்கிற பிரதமர் மன்மோகன் சிங்கின் கூற்று, மறைமுகமாக வல்லரசு நாடுகளைக் குற்றம் சாட்டுவதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
 ÷அதேபோல, பாலஸ்தீனர்களின் பிரச்னையில், அமெரிக்கா பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. சபையில் இடம் கொடுப்பதால் எந்தவித பலனோ, மேற்கு ஆசியாவில் அமைதியோ ஏற்பட்டுவிடாது என்கிற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது. ஆனால், பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. சபையில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று இந்திய நிலையை சந்தேகத்துக்கு இடமின்றி இந்தியப் பிரதமர் தெளிவுபடுத்தி அமெரிக்கர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
 ÷""பாலஸ்தீனம் ஒரு சுதந்திர நாடாகக் கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, இஸ்ரேலுடன் சமாதானமாக இயங்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஐ.நா. சபையின் உறுப்பினராக முழுத் தகுதியும் பெற்ற நாடாக பாலஸ்தீனம் விரைவில் வரவேற்கப்பட வேண்டும் என்று இந்தியா விழைகிறது'' என்று தனது உரையில் சந்தேகத்துக்கு இடமின்றி பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருப்பது, இந்தியா அமெரிக்காவுக்காகத் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதைக் காட்டுவதாக இந்தியத் தரப்பு துணிந்து கூறியும் வருகிறது.
 ÷எல்லாவற்றையும் விட, பிரதமரின் உரையிலேயே மிகவும் முக்கியமான அம்சமாக நியூயார்க்கிலுள்ள வெளிவிவகாரத் துறை நிபுணர்கள் கருதுவது, உள்நாட்டுப் பிரச்னைகளில் அந்நிய ராணுவத் தலையீடு பற்றிய பிரதமரின் கண்டனம்தான். ஏனைய உறுப்பினர் நாடுகள் எதுவும் தெளிவான கருத்துத் தெரிவிக்காத நிலையில், இந்தியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
 ÷""எப்படி சட்டத்தின் ஆட்சி தேச நிர்வாகத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டுமோ, அதேபோல சர்வதேசப் பிரச்னைகளிலும் சட்டமும், நியாயமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். எந்தவொரு சமுதாயத்தையும் வெளியிலிருந்து அந்நியர்கள் தங்கள் ராணுவத்தின் உதவியுடன் முறைப்படுத்தவோ, நெறிப்படுத்தவோ முடியாது. உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அந்நிய ராணுவம் முறைகேடாகத் தலையிடுவதும், பஞ்சாயத்து செய்வதும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். மக்கள் தங்களது தலையெழுத்தை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப் பட வேண்டுமே தவிர, அவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அந்நிய நாடுகள் தீர்மானிக்க முடியாது. அப்படியே தலையீடு தேவைப்பட்டால், அது ஐ.நா. சபையின் தலைமையில் மட்டும்தான் நடைபெற வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருப்பதைக் கேட்டு அமெரிக்கத் தரப்பு அதிர்ந்து போயிருப்பதாகத் தெரிகிறது.
 ÷மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வரும் அமெரிக்கா, வளர்ந்து வரும் பொருளாதார சக்தியான இந்தியாவின் நட்பை இழந்துவிட விரும்பாது என்றும் சில விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் அணுகுமுறை மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை அலசத் தொடங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது.
 ÷லிபியாவில் அமெரிக்க ராணுவம் அத்துமீறி, அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிரான போராளிகளை ஆதரித்து மக்கள் போராட்டத்தை ஏற்படுத்தியதுபோல, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் அத்தகைய அணுகுமுறையை அமெரிக்கா கையாண்டுவிடாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இது என்று விளக்கமளிப்போரும் இருக்கிறார்கள்.
 ÷இந்தியாவில் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தபோது, அதற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்துத் தெரிவித்தது முதலே, மன்மோகன் சிங் அரசுக்கு அமெரிக்காவின் உள்நோக்கம் பற்றிய சந்தேகம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் ரஷ்யா, பிரேசில், பிரான்ஸ் போன்ற நாடுகளுடனான இந்திய உறவு பலப்பட்டிருப்பதும், அமெரிக்கப் பொருளாதாரம் நாளுக்கு நாள் பலவீனப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதும்கூட இந்தியாவின் அணுகுமுறை மாற்றத்திற்குக் காரணங்கள் என்கிறார்கள்.
 ÷இதைப்பற்றிக் கேட்டபோது, ""இந்தியா எப்போதுமே தனக்கென்று வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. ஒருபோதும் நாம் அமெரிக்கக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்ததே கிடையாது. கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்திய அமெரிக்க நல்லுறவு தொடர்ந்து வந்தது என்பதுதான் உண்மை. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏதோ இந்தியா தனது கொள்கையைக் கைவிட்டு அமெரிக்காவைச் சார்ந்த நேச நாடாக மாறிவிட்டது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அது உண்மையல்ல. நமது வெளிவிவகாரக் கொள்கை எப்போதுமே தனித்தன்மை வாய்ந்ததாகத்தான் இருந்து வருகிறது'' என்று தேசியப் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர மேனன் தெரிவித்தார்.
 ÷ஐ.நா. சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கும் இந்தியப் பிரதமர் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் தலைவர்கள் பலரைச் சந்திக்கவில்லை என்பதும், வழக்கத்துக்கு விரோதமாக துணிந்து வல்லரசு நாடுகளின் அணுகுமுறையை விமர்சித்திருக்கிறார் என்பதும், மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி :தினமணி 

No comments:

Post a Comment