Friday 15 July 2011

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகளுக்கு ஒரு உருக்கமான கடிதம்.


அன்பான தீவிரவாதிகளே வணக்கம்;
    பள்ளிப் பருவத்திலிருந்தே இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்கள் என உறுதி மொழி எடுத்துக் கொண்ட காரணத்தினால் அனைவரையும் என் சகோதர சகோதரிகளாகவேக் கருதுகிறேன்.இதற்க்கு முந்தைய தாக்குதல்களில் நான் எண்ணற்ற சகோதர சகோதரிகளை இழந்து விட்டேன்.இனிவரும் தாக்குதல்களில் நானே மடியலாம்.இருந்தாலும் நீங்களும் இந்தியராக இருந்தால் என் சகோதரே.
    உங்கள் பாதுகாப்பை உறுதி செய்துக் கொள்ள தயவுசெய்து எங்கள் நாட்டிடம் சரணடைந்து விடுங்கள்.எங்கள் அரசு உங்களுக்கு உயர்மட்டப் பாதுகாப்பினை வழங்கும்.அதற்க்கு நீங்கள் பணம் செலுத்த தேவை இல்லை.வேகாத வெயிலில் வெந்து கடின உழைப்பின் மூலம் வருவாய் ஈட்டி அரசுக்கு வரி செலுத்தும்;எங்கள் அடிப்படைக் குடிமகனிடமிருந்து பெற்று அதனை உங்களுக்காகச் செலவு செய்வதில் வல்லவர்கள் எங்கள் நாட்டினை ஆள்பவர்கள்.
    நீங்கள் நினைக்கலாம் எங்கள் மக்கள் புரட்சி செய்தால் உங்களை தூக்கிலிட்டு விடுவார்கள் என நீங்கள் பயப்படலாம்.எங்கள் அரசியல்வாதிகளுக்கு மக்கள் தேவை இல்லை;ஓட்டுகள்தான் முக்கியம் ஆகவே இதற்க்கு ஒரு மதச் சாயத்தினைப் பூசி உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுவார்கள்.பாதிக்கப் பட்டவர்களிடம் எதிர்ப்பலை வீசி அவர்கள் புரட்சி செய்ய முனைந்தால்;அவர்கள் வீட்டிற்கு எங்கள் இளைய இந்தியா ராகுல் காந்தியினை அனுப்பி உணவருந்த செய்து அந்த எதிர்ப்பலையை அனுதாப அலையாக மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தவர்கள் எங்கள் அரசியல் வாதிகள்.
    நான் ஏதோ ஒரு விதத்தில் அரசுக்கு வரி செலுத்திக் கொண்டுதான் இருப்பேன்;நான் பட்டினியால் மாண்டாலும் உங்களுக்கு அந்த பணத்தில் எங்கள் அரசு பாசுமதி பிரியாணியும்;தினமும் பதினைந்திற்கும் மேற்பட்ட செய்திதாள்களும் வழங்கும்.
     நீங்களே தேடினாலும் அவ்வாறான வழக்கறிஞர் கிடைக்க மாட்டார்.உங்களுக்கு சட்டத்தை கரைத்துக் குடித்த சட்டத்தரணியை எங்கள் அரசு இலவசாமாக ஏற்பாடு செய்துத் தரும்.எங்கள் காவல் துறையைப் பற்றி நீங்கள் பயப்படத் தேவை இல்லை.எவ்வாறு இதற்க்கு முந்தைய விடுதலைப் போராட்ட தியாகிகளான அஜ்மல் கசாப்;அப்சல் குரு போன்றோரைப் பாதுகாத்து வைத்துள்ளனரோ;அதனைப் போன்று உங்களையும் பாதுகாப்பது அவர்களின் தலையாயப் பணி.
    எங்கள் நீதித்துறை எங்கே நீதி வழங்கிவிடுமோ என நீங்கள் பயப்பட வேண்டாம்.எங்கள் நாட்டின் நீதி துறை தற்பொழுது ராக்கெட் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.ஒருவர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அவருடையப் பதவிகாலம் முடிந்து அடுத்த சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்ற நாளில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது.அதனைப்போல தமிழக காவல் துறை தலைவர் லத்திகா சரணின் நியமனம் செல்லாது என அவர் பதவி காலம் முடிந்த பின்புதான் வழங்கப் பட்டது.அவர்கள் நியமனம் செய்யக் கோரியவர் தீர்ப்பு வந்தப் பொழுது ஓய்வு பெற்றுவிட்டார்.உங்கள் வழக்கு விசாரணையை திசை திருப்ப எங்கள் நாட்டு அரசு திக் விஜய் சிங் மூலம் பல பிரச்சாரங்களை மேற்கொள்ளும். 
   எங்கள் மக்களைப் பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்.அடுத்த ஆண்டு அதே நாளில் ஒரு நினைவேந்தலை நடத்தி அதனை மறந்துவிடுவார்கள்.
  இல்லையேல் எங்கள் அரசு அவர்களை திசை திருப்ப பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்திவிடும்.நீங்கள் பாகிஸ்தானுக்குள் இருந்தால் அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளாக நேரலாம்.ஆகவே நீங்கள் வெளியில் வாழ்வதை விட எங்கள் நாட்டுச் சிறைக்குள் பாதுகாப்பாக சகல வசதிகளுடன் வாழலாம்.எங்கள் நாட்டில் எங்களுக்குப் பாதுகாப்புக் கிடையாது .உங்களுக்கு முழு பாதுகாப்பையும் வழங்குவது எங்கள் அரசின் கடமை.
   ஆகவே எங்கள் நாட்டு சிறையில் வாழும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் அஜ்மல் கசாப்;அப்சல் குரு வரிசையில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் நீங்கள் சரணடைந்தால் உங்களுக்கு ஆகும் செலவுகளையும் சேர்த்து எங்கள் தலையில் கட்டுவதற்கு எங்கள் அரசுக்கு எளிதாக இருக்கும்.

  இப்படிக்கு;
உங்களால் பாதிக்கப் பட்ட மற்றும் பாதிக்கப் படப் போகிறவர்களின் சகோதரன். 

No comments:

Post a Comment